Wednesday, October 31, 2012

முத்துராமலிங்கத் தேவர்


முத்துராமலிங்கத் தேவர் (அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) தென் தமிழகத்தில் பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்தவர். சுதந்திரப் போராட்டத் தியாகியாக விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பரங்கியரை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாள் தமிழக அரசு விழாவாக பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்றும் அறியப்பட்ட இவர் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார். மேலும் மூன்று முறை இந்திய பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்[1][2][3]. 1957 ஆம் ஆண்டு இம்மானுவேல் சேகரன் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட இவர் இந்த கொலைக்கும் இவருக்கும் தொடர்பு இருக்குமா என்று சந்தேகிக்கக் கூட முடியாது என்று கூறி நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
குழந்தை பருவமும் குடும்ப வாழ்க்கையும் : 
        தமிழ்நாட்டின் தென்கிழக்கு மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த பிறந்தவர். உக்கிரபாண்டி தேவருக்கும் இந்திராணி அம்மையாருக்கும் ஒரே மகனாவார். இவரது தாயார் இவருக்கு ஒருவயது நிரம்பும் முன்பே காலமானார். இவர் தாயை இழந்தபின்பு இவரது தந்தையார் குறுகிய காலத்திலேயே மறுமணம் புரிந்துகொண்டார். அந்த இரண்டாவது மனைவியாரும் இறந்த காரணத்தினால் மீண்டும் ஒரு திருமணம் புரிந்து கொண்ட உக்கிரபாண்டி தேவரின் மீது பார்வதியம்மாள் அவர்கள் மிகுந்த கோபத்தில் இருந்தார். இதனால் முத்துராமலிங்க தேவர் இவரது உறவின் முறை பாட்டியான பார்வதியம்மாளின் பாதுகாப்பில் கல்லுபட்டி என்கிற கிராமத்தில் வளர்ந்தார். இளமைப் பருவத்தில் தேவரவர்கள் குழந்தைசாமி பிள்ளை என்கிற குடும்ப நண்பரால் பயிற்றுவிக்கப்பட்டார். பிள்ளை அவர்கள் தான் தேவரின் பள்ளிப்படிப்பிற்கு மிகுந்த சிரத்தை எடுத்து தனிக்கல்வி பயிற்சி அமைத்துக் கொடுத்தார். பின்னர் ஆரம்பப்பள்ளி படிப்பைக் கமுதியில் உள்ள அமெரிக்கன் மிசனரீசால் நடத்தப்பட்டு வந்த பள்ளியில் முடித்தார். பின்னர் தேவர் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்னர் மதுரையில் உள்ள யூனியன் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தார்.
1924ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணத்தால் தேவர் அவர்கள் பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்க இயலவில்லை. இவரது தந்தையாரின் அடுத்தடுத்த இரண்டு திருமணங்களின் காரணத்தால் பசும்பொன் திரும்பிய பிறகு வாரிசு உரிமைக்கும் குடும்பப் பாரம்பரிய சொத்துகளுக்கும் இவர் போராட வேண்டியிருந்தது. 1927இல் வழக்குமன்றத்தில் இது சம்பந்தமான தீர்ப்பானது முத்துராமலிங்க தேவருக்குச் சாதகமாக முடிந்தது. தேவரின் தந்தையார் உக்கிரபாண்டி தேவர் 1939ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் நாள் மறைந்தார்.
குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம்:
                     தென்னக அரசியலில் தேவர் கையில் எடுத்த இந்த குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்கிற ஆயுதம் இவர் மீது தனித்தன்மையான அரசியல் நோக்கினை உண்டாக்கியது. 1920ஆம் ஆண்டில் இருந்து அப்போதைய மதராஸ் மாகாணத்தில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமுலில் இருந்த குற்ற பரம்பரை சட்டம் என்கிற சட்டத்திற்கு எதிராக தேவர் அவர்கள் முதன் முதலாக போராடினார். தேவர் அவர்களின் அரசியல் பிரவேசத்திற்கு பின்பு தான் இந்த போராட்டம் உச்சகட்டம் எட்டியது. இந்த சட்டத்தினை எதிர்க்கும்படி விழிப்புணர்ச்சி உண்டாக்கும் வண்ணம் இவர் மேற்கண்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் நிகழ்த்தி மக்களை திரட்டினார். ஆப்பநாடின் 19 கிராம மறவர் சமூகத்தை சேர்ந்தவர்களை இந்த சட்டத்தின் கீழ் அப்போதைய அரசு கைது செய்தபின்பு தேவர் மிகப்பெரிய பிரச்சாரத்தினை கிராமங்கள் தோறும் நிகழ்த்தி மக்களை திரட்டி போராடினார். இந்த போராட்டத்தில் தேவருடன் இருந்த Dr.P.வரதராஜுலு நாயுடு, பெருமாள் தேவர், சசிவர்ண தேவர், மற்றும் நவநீதக்ருஷ்ண தேவர் ஆகியோர் இணைந்த சமாதான பேச்சுவார்த்தை குழு நியமிக்கப்பட்டு அப்போதைய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆகிலும் இந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வியால் இந்த சட்டம் பிரித்தானிய அரசினால் நீக்கப்படவில்லை. பின்னாளில் மீண்டும் தேவரின் தலைமையில் போராட்டம் சீற்றமடைந்து இந்த சட்டம் நீக்கப்பட்டது.
1936 மாவட்ட வாரிய தேர்தல்:
                      குற்றபரம்பரை சட்டத்தின் காரணமாக நீதி கட்சியின் அரசின் மீது இருந்த வெறுப்பு உண்டாகியது. இதன்பின் இந்த சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் 1936ஆம் ஆண்டு பர்மாவில் இருந்து திரும்பி வந்த தேவர் தென்தமிழகத்தில் காங்கிரசின் வளர்ச்சிக்கு உழைத்தார். பின்னாளில் வந்த தேர்தலில் தேவர் முதுகுளத்தூர் தொகுதியில் நீதிக்கட்சியின் வேட்பாளரை எதிர்த்து நின்று வெற்றிபெற்றார். இதுவே தேவரின் முதல் தேர்தல் வெற்றியாகும். இந்த வெற்றிக்கு பின்னர் தேவர் மாவட்ட வாரிய தலைவரானார்.
1937 மாநில தேர்தல்:
        1937ஆம் ஆண்டு நடந்த மதராஸ் மாகாண தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் தேவர் அவர்கள் இளைஞர்களை காங்கிரஸ் கட்சிக்கு உழைத்திடும்படிக்கு திரட்டினார். தேவரின் இந்த செயல்கள் நீதிகட்சியினருக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. இதனால் அந்த அரசாங்கம் தேவரை இராமநாதபுரத்திற்கு வெளியே பயணித்து பிரசாரம் செய்ய முடியாதபடிக்கு சட்டங்களும் கட்டுபாடுகளும் விதித்தது.
1937ஆம் ஆண்டு பிப்ரவரியில் இராமநாதபுரம் தொகுதியில் தேவர் போட்டியிட்டார். இவரது அரசியல் வளர்ச்சியை கண்டு பயந்துபோன ஆங்கிலேய நீதி கட்சியரசு பலம் வாய்ந்த எதிர் வேட்பாளராக இராமநாதபுர மன்னர் அவர்களை நிறுத்தியது. ஆனாலும் முத்துராமலிங்க தேவர் அந்த தேர்தலில் மன்னரை எதிர்த்து மகத்தான வெற்றிபெற்றார். பின் வந்த தேர்தல்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி மாகாணத்தினை ஆளும் கட்சியாக உருபெற்றது. இந்த காங்கிரஸ் கட்சி அரசு குற்ற பரம்பரை சட்டத்தினை விலக்கும் என்று தேவர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் அப்போதைய புது அரசின் முதல்வரான C.ராஜகோபாலாச்சாரி அவர்கள் அந்த சட்டத்தினை நீக்கவில்லை. தொழிலாளர்களின் தோழனாக: 1930களில் தேவர் அவர்கள் தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தினார். பசுமலையில் மகாலெட்சுமி ஆலை தொழிலாளர் நலன் கூட்டமைப்பை உருவாக்கி தேவரே தலைமை ஏற்று நடத்தினார். மகாலெட்சுமி ஆலை தொழிலார்கள் சங்கமும் மதுரா பின்னலாடை ஆலை தொழிலாளர் சங்கமும் இணைந்து நடத்திய போராட்டத்தினை தேவர் தலைமை தங்கி நடத்தினார். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீள் பணியில் அமர்த்தும் போரத்தில் தேவர் 1938 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் நாள் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். இந்த போராட்டங்களில் வெற்றியும் பெற்றார். பின்னர் 1945 ஆம் ஆண்டு TVS தொழிலாளர் சங்க தலைமை பொறுப்பையும் ஏற்றார்.

திரிபுரி காங்கிரஸ் மாநாடும் பார்வர்ட் பிளாக்கின் வளர்ச்சியும்:
         1939ஆம் ஆண்டு திரிபுரியில் நடைபெற்ற 52ஆவது வருடாந்திர காங்கிரஸ் கூட்டத்தில் தேவர் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை எதிர்த்து பட்டாபி சீதாராமையா போட்டியிட்டார். சீதாராமையா காந்தியடிகளில் ஆதரவு பெற்றவராவார். ஆனாலும் மீண்டு போஸ் அவர்கள் தேவரின் ஆதரவோடு காங்கிரசின் தலைமை பொறுப்பில் அமர்ந்தார். தேவர் தென்னிந்தியாவின் வாக்குகளை போஸ்க்கு ஆதராவ திரட்டினார்.
பின்னர் காந்தியின் தலையீட்டின் படிக்கு போஸ் அந்த பொறுப்பை விட்டு விலகி ஜூன் 22ஆம் நாள் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியை நிறுவினார். காங்கிரஸ் கட்சியின் மீதான கருத்து வேறுபட்டாலும் குற்றபரம்பரை சட்டத்தின் மீதான காங்கிரசின் நிலைபாட்டின் காரணத்தினாலும் தேவர் போசுடன் இணைந்தார். பின்னாளில் செப்டம்பர் 6ஆம் நாள் போஸ் மதுரைக்கு வந்திருந்த பொழுது தேவர் அவர்கள் போஸை வரவேற்கும் விதமாக மிகபெரிய கூட்டத்தினை கூட்டினார்.

சிறையில்:
        வளர்ந்து வந்த தேவரின் செல்வாக்கினாலும் காங்கிரஸ் விரோத போக்கினாலும் கலங்கிய அப்போதைய அரசு தேவரின் தொழிலாளருடன் இணைந்த போராட்டங்களை கரணம் காட்டி மதுரா பாதுகாப்பு என்கிற பெயரில் தேவர் மீது வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் மூலம் தேவர் மதுரையை விட்டு வெளியேற முடியாதபடிக்கு தடுக்க நினைத்தது. பின்னர் 1940 ஆம் ஆண்டு செப்டம்பர் மதம் தேவர் மதுரையில் இருந்து தனது சொந்த ஊரான பசும்பொன்னிற்கு பயணித்த பொழுது திருப்புவனத்தில் அவரை கைது செய்து திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் 18 மாத சிறைவாசத்தில் அடைத்தது. இவரது கைது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சி பேரலையை ஏற்படுத்தியது. 18 மாதங்களுக்கு பின்னர் இவர் விடுதலையான பொழுது சிறை வாசலிலேயே இந்திய பாதுகாப்பு சட்டத்தினை கரணம் காட்டி மீண்டும் சிறையில் அடைத்தனர். பின்னர் 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் விடுதலை
ஆனார்.

சிறை வாசத்திற்கு பின்
          மார்ச் மாதம் 1946 ஆம் வருடம் நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தேவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டார். இதன் பின்னர் குற்றபரம்பரை சட்டம் நீக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 1948இல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பார்வர்ட் பிளாக் கட்சி தனித்து பிரதான எதிர்க்கட்சியானது. இதில் தேவர் பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ்நாட்டின் தலைவரானார் (இந்த பதவியில் இவர் பின் வந்த வாழ்நாள் முழுவதும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது).1949 ஆம் ஆண்டு ஜனவரி 23 அன்று தேவர் சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் கூட்டத்தின் போது சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் உள்ளார் என்றும் அவர் விமான விபத்தில் இறந்ததாக கூறுவது பொய் எனவும் அவரை தாமே சந்தித்தாக பகிரங்கமாக அறிவித்தார். இதன் பின்னர் தேவர் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் எந்தவித அறிவிப்பும் இன்றி மறைந்திருந்தார் சென்றார். பின்னர் 1950 இல் மீண்டு போது வாழ்க்கைக்கு திரும்பினார். இப்படி மறைந்திருந்த காலங்களில் தேவர் சீனாவிற்கும் கொரியாவிற்கும் இந்தியாவிலிருந்து யாருக்கும் தெரியாமல் பயணித்ததாகவும் தகவல்கள் நிலவின ஆனாலும் இதற்க்கு ஆதாரமின்மையால் நிரூபிக்கபடாமல் போயின. பின்னாளில் பார்வர்ட் பிளாக் கட்சியில் ஏற்பட்ட பிளவினால் 1948இல் கட்சி இரண்டாக உடைந்தது. இந்த பிரிவினையில் தேவர் சார்ந்திருந்த பிரிவு மட்டுமே இன்றும் நிலைத்திருக்கிறது.

1952 பொது தேர்தல்:
        1952 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பொது தேர்தல் நடைபெற்றது. இதில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் அல்லாத ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்கிற முனைப்புடன் பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டது. லோக் சபா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் என இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடந்தது. இதில் தேவர் அருப்புகோட்டை லோக்சபா தொகுதியிலும் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றியும் பெற்றார். இதில் தேவர் அவர்கள் லோக்சபா பதவியை துறந்து சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று மதராஸ் சட்டமன்ற உறுப்பினர் குழுவில் இடம்பெற்றார். இந்த தேர்தலுக்கு பின் காங்கிரஸ் மதராஸ் சட்ட மன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்தது. மேலும் தேவர் கம்ம்யூனிஸ்ட்டுகளுடன் இணைந்து காங்கிரஸ் அல்லாத ஆட்சியை நிறுவ முனைந்தார். ஆளுநர் அவர்கள் C.ராஜகோபாலசாரியார் அவர்களை முதல்வராக நியமித்தார்.

பார்வர்ட் பிளாக் கட்சியின் பிளவு:
           1955 ஆம் ஆண்டு பார்வர்ட் பிளாக் கட்சியில் மீண்டுமொரு பிளவு ஏற்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ் சகோதரத்துவத்தை ஆதரித்தது. மோகன் சிங்க் மற்றும் சீல் பந்திரா யாகி போன்ற பார்வர்ட் ப்ளாக்கின் முக்கிய தலைவர்கள் காங்கிரசுடன் இணைய முற்பட்டனர். இந்த முடிவை கட்சியின் பிற தலைவர்கள் ஏற்க முன்வரவில்லை. பார்வர்ட் பிளாக் கட்சி தனித்தே இருக்க வேன்றுமென்று விரும்பினர். இருப்பினும் மோகன் சிங்க் – யாகி ஆகியோர் தன்னிச்சையாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இந்த தருணத்தில் 1955 ஆம் ஆண்டு மே மாதம் 11 முதல் 15 தேதிகளில் நாக்பூரில் நடந்தது. இதில் சிங்க் – யாகி ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். இதில் ஹேமந்த் குமார் போஸ் அவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஹல்டுல்கர் பொது செயலாளராகவும் தேவர் அவர்கள் துணை தலைவராகவும் தேர்ந்தேடுக்கபட்டனர் (இந்த பதவியில் தேவர் அவர்கள் இறக்கும் வரை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது).

1957 பொது தேர்தல் :
           1955 ஆம் ஆண்டு தேவர் அவர்கள் பர்மா வாழ் தமிழ் மக்களின் அழைப்பை ஏற்று இரண்டாம் முறையாக பர்மா சென்றார். அங்கு பர்மா வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு அரசியல் மற்றும் ஆன்மீக நிகழ்சிகளில் பங்கேற்றார். பின்பு 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள் பொது தேர்தலை சந்திப்பதற்காக தாயகம் திரும்பினார். காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைக்கும் பொருட்டு பார்வர்ட் பிளாக் கட்சி உழைத்து கொண்டிருந்த வேளையில். மெட்ராஸ் மாநிலத்தில் புது பரிணாமமாக காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. C.ராஜகோபாலாச்சாரி அவர்களின் தலைமையில் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி (CONGRESS REFORM COMMITTEE) என்கிற பிரிவில் காங்கிரஸ் உடைந்தது.தேவர் இந்த முறை தனது முன்னாள் அரசியல் எதிரியான C.ராஜகோபாலாச்சாரி அவர்களுடன் அமைதியை பேணினார். இதன் காரணமாக பார்வர்ட் பிளாக் கட்சியும் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி கட்சியினரும் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க தேர்தலில் இணைந்து பணியாற்றினர். இந்த தேர்தலிலும் தேவர் அருப்புகோட்டை தொகுதியில் லோக்சபா உறுப்பினருக்கும் முதுகுளத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருக்கும் போட்டியிட்டார். இம்முறையும் இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்றார். இந்த முறை தேவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார்.

 இராமநாதபுரம் கலவரம்:
          தேவர் முதுகுளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த காரணத்தினால் இந்த தொகுதிக்கு 1957 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் நாள் அன்று இடைதேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேவரின் ஆதரவு பெற்ற பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர் சசிவர்ண தேவர் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் முடிவு அறிவிப்பு நேரங்களில் ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் பதற்றம் நிலவியது. இது பின்னை கலவரமாக வெடித்தது பார்வர்ட் பிளாக் கட்சிக்கு அனேக ஆதரவளித்து வந்த மறவர் இனத்தவர்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து வந்த தேவேந்திர இனத்தவர்களும் பெருமளவில் மோதிக்கொண்டனர். இந்த கலவரம் இராமநாதபுரத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதில் பலர் கொல்லப்பட்டனர் ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரயாக்கபட்டன.
இந்த கலவர நேரத்தில் லோக்சபா கூட்ட தொடரில் கலந்து கொள்வதற்காக ஜூலை 17 ஆம் நாள் டெல்லி சென்றிருந்த தேவர் அவர்கள் செப்டம்பர் 9 ஆம் நாள் திரும்பவும் தென்னகம் வந்தார். செப்டம்பர் 10 ஆம் நாள் நடந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் சசிவர்ண தேவர், மற்றும் வேலுவுடன் (பார்வர்ட் பிளாக் கட்சியை சேர்ந்த தலித் சமூகத்தினை சார்ந்த தலைவர்) முத்துராமலிங்க தேவரும் கலந்து கொண்டார். காங்கிரஸ் சார்பில் ஆறு தலித் தலைவர்களும் மேலும் பல நாடார் சமூக தலைவர்களும் கலந்து கொன்றனர். இந்த கூட்டத்தில் அனைத்து சமூகத்தவரும் இணக்கமாக வாழ்வதென்று முடிவு செய்யப்பட்டு கூட்டம் கலைந்தது.இதற்கிடையில் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் தேவேந்திரர்    என்பவர் துரதிஷ்டவசமாக கொல்லப்பட்டார். இந்த அரசியல் நிகழ்வு படுகொலை சற்று நேரத்தில் சாதி சண்டையாக உருவெடுத்து தென் மாவட்டங்கள் ஜாதி கலவரத்தில் பற்றி எரிந்தன. கலவரம் போலீஸ் மூலம் கட்டுக்குள் அடக்கப்பட்டு சிறிது நாளில் (செப்டெம்பர் 28 ஆம் நாள்) தேவர் அவர்கள் இம்மானுவேல் சேகரன் கொலை சம்மந்தமாக பாதுகாப்பு சட்டத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்ன இந்த பாதுகாப்பு வழக்கு கொலைவழக்காக மாற்றப்பட்டது. பின்னர் புதுகோட்டை நீதிமன்றத்தில் இந்த வழக்கு வழக்காடபட்டது. பின்னாளில் தேவர் அவர்கள் இம்மானுவேல் சேகரன் கொலையில் சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டார். பார்வர்ட் பிளாக் கட்சி தேவர் மீதான இந்த வழக்கு காங்கிரஸ் கட்சியினரின் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தேவர் மீது போடப்பட்டது என்று கண்டனம் தெரிவித்திருந்தது. பின்னர் இந்த வழக்கின் முடிவில் தேவர் இந்த வழக்கில் சம்மந்த பட்டிருப்பாரோ என்று சந்தேகிக்க கூட இடமில்லை என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு. தேவரை நிரபராதி என்று இந்த வழக்கில் இருந்து ஜனவரி 1959 விடுவித்தது.

இறுதி நாட்கள்:
           வழக்கிலிருந்து விடுபட்ட தேவர் அவர்கள் 1959 ஆம் ஆண்டு நடைபெற்ற மதுரை நகராட்சி தேர்தலில் மும்முரமானார். இதில் கம்யூனிஸ்டுகள், இந்திய தேசிய குடியரசு காங்கிரஸ்(INDC – முன்னாளில் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி) ஆகிய கட்சிகளுடன் இணைந்து பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலின் பொழுது தான் திராவிட முன்னேற்ற கழகமும் உருவானது. இதில் தேவரின் கூட்டு கட்சிகள் வெற்றி வாகை சூடின. இதுவே தமிழகத்தில் காங்கிரசின் முதல் வீழ்ச்சியாகும். தொடர்ந்து வந்த தேர்தல்களில் தேவர் அவர்கள் உழைத்ததின் காரணமாகவும் உடல்நலக்குறைவின் காரணமாகவும் பொது வாழ்க்கையில் இருந்துது சிறிது காலம் விலகி இருக்க நேர்ந்தது.
பின்னர் 1962இல் மீண்டு லோக் சபா தேர்தலுக்கு இவர் முன்னிறுத்தப்பட்டார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் தேவர் ஓரேயொரு பிரச்சார மேடையில் மட்டுமே தோன்றினார். இவருடன் C.ராஜகோபாலசாரியார் அவர்களும் தேவரும் இணைந்து தோன்றிய கடைசி பிரச்சார மேடை இதுவே ஆகும். தேவர் மீண்டும் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு உடல்நலக்குறைவின் காரணமாக அப்போது நடைபெற்ற கூட்ட தொடரில் பங்கேற்க டெல்லி செல்ல முடியவில்லை.
பசும்பொன்.உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் 1963 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் நாள் அவரது 55வது பிறந்த நாளன்று இயற்க்கை எய்தினார். இவர் மறைவின் காரணமாக அருப்புகோட்டை லோக்சபா தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டு தோற்றது. இதுவே தமிழகத்தில் இந்த கட்சியின் முதல் தொல்வியாகும்.

கொள்கைகள்:
           ஆன்மிகம், தேசியம், பொதுவுடைமை எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, மற்றும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஆகியன இவரது முக்கிய கொள்கைகளாக இருந்தன.
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்
               வீரமற்ற விவேகம் கோழைத்தனம் – விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம் என்பனவல்லாம் இவர் மொழிந்த வாசகங்களாகும். ஒரு தேசியவாதியாக தேவர் அவர்கள் திராவிடர் கழகம் மற்றும் அதன் வழி கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் ஆகியனவற்றை அவற்றின் பிரிவினை வாதம் மற்றும் குறுகிய நோக்கு போன்ற கொள்கைகளுக்காக வெறுத்தார். அதேநேரம் தேவர் லெனினிசம்-மார்க்சிசம் இரண்டையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இவரது மறைவுக்கு பின் பார்வர்ட் பிளாக் கட்சி தனது அழிவின் பதில் சென்றது. இந்த கட்சியின் அடுத்த தலைவராக P.K.மூக்கையா தேவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதன் பின்னர் இந்த கட்சியிலிருந்த பெரும்பான்மையான மறவர் ஓட்டு வங்கியானது தி.மு.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் சென்றது. தேவர் இந்த தென்னக தேவரின மக்களின் அன்பிர்க்குரியவராகவும் வணங்குதலுக்குரியவராகவும் திகழ்கிறார். இன்றும் இந்த மக்களின் ஆதரவோடு ஆட்சியமைக்க பல கட்சிகள் இவர்களை ஆதரித்து வருகிறன. இன்றும்கூட சில கலவரங்களின் பொழுது இவரது நினைவு சின்னங்கள் இலக்காவது அனைவரும் அறிந்த ஒன்றே.

சிறந்த பேச்சாளர்:
        தேவர் சிறந்த பேச்சாற்றல் கொண்டவராக இருந்தார். குறைந்தது மூன்று – நான்கு மணிநேரம் சொற்பொழிவாற்றும் நாவன்மை பெற்றிருந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் சிறந்த புலமையும் பேச்சாற்றலும் கொண்டவராக இருந்தார்.
ஆன்மீகத்தில் தேவர் கொண்டிருந்த ஞானமும், ஆன்மீக சொற்பொழிவுகளும் இவருக்கு தெய்வத்திருமகன் என்ற பெயரை பெற்றுத்தந்தன. இவர் தமிழ் இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தவராக இருந்தார்.இவரது சொற்பொழிவுகளில் தமிழ் பாடல்களின் மேற்கொள்கள் இடம்பெற்றும் வந்தன.

தெற்குச்சீமையின் மாபெரும் தலைவராக, வங்கத்துச் சிங்கம் நேதாஜிக்கு நிகரான தலைவராக தெற்கே உலாவிய தலைவர் தேவர். அவர் பிறந்தது, அக்டோபர் 30, 1908. வாழ்ந்த நாள்கள் 20,075. அதில் 4,000 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுக் கிடந்தார். தன் வாழ்வில் ஐந்தில் ஒரு பகுதியை சிறையில் கழித்தவர் அந்தத் தென்னாட்டுச் சிங்கம்.நாட்டின் விடுதலைக்காக, ஆங்கில ஏகாதிபத்தியத்தின் பிடரி மயிரைப்பிடித்து உலுக்குகின்றவராக, அடக்குமுறைக்கு அஞ்சாத தீரராக இருந்தவர் ,, பிறந்த ஆறு திங்களில் அன்னையை இழந்தார். ஒரு இஸ்லாமியத் தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். ஜாதி எல்லைகளைக் கடந்த தலைவர் அவர்..அவருக்குப் பத்தொன்பது வயது ஆயிற்று. 1927 ஆம் ஆண்டு, சென்னையில் காங்கிரஸ் மாநாடு. அந்த மாநாட்டுக்குத் தலைமை ஏற்றவர் டாக்டர் அன்சாரி. தேவர் திருமகனார் அரசியலுக்கு உள்ளே அப்போது நுழையவில்லை. அவர் குடும்பம் பெரிய ஜமீன் குடும்பம். எண்ணற்ற கிராமங்கள் அவருடைய கட்டுப்பாட்டில் ஆளுகைக்கு உள்ளே இருந்தன. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலபுலங்கள். ‘எனக்குப் பஞ்சுமெத்தை தெரியாது, பட்டுத் தலையணை தெரியாது, பாய்தான் தெரியும்’ என்று சொன்ன தேவர்திருமகன், ஒரு சீமான் வீட்டுப்பிள்ளை. செல்வச் செழிப்புள்ள குடும்பத்து வீட்டில் பிறந்த பிள்ளை. அப்படிப்பட்ட தேவர் திருமகனார், அவருடைய குடும்பத்தில் இருந்த பிணக்குகளால், சிவில் வழக்குகள் தந்தையாரோடு மனத்தாங்கல் ஏற்பட்டது.,அப்படிப்பட்ட சூழலில், அந்த சிவில் வழக்குகளை நடத்துவதற்காகச் சென்னைக்குச் சென்றார். ‘அம்ஜத் பார்க்’ என்கிற பெயருள்ள மாளிகை. மயிலாப்பூரில், மூன்று ஏக்கர் சுற்றளவு உள்ள மாளிகை. அந்த மாளிகையின் சொந்தக்காரர் சீனிவாச அய்யங்கார். மிகப்பெரிய வழக்கறிஞர். அவரிடம் சென்றார் வாலிபராக இருந்த தேவர்.,‘ஐயா, இந்த வழக்குகளை நடத்த வேண்டும். அதற்காக வந்து இருக்கிறேன்’ என்றவுடன், பெரிய குடும்பத்துப் பிள்ளை அல்லவா? சீனிவாச அய்யங்கார் அவ்வளவு பெரிய மாளிகையில் அவரை வரவேற்று உபசரித்து, ‘நான்கு நாள்கள் காங்கிரஸ் மாநாடு இங்கே நடக்கிறது. அந்த வேலையில் இருக்கிறேன். நான்கு நாள் கழித்து, இந்த வழக்கு விசயங்களை, இந்த ஆவணங்களைப் பார்க்கிறேன்’ என்று சொல்கிறார்.பிறகு சில நிமிடங்கள் கழித்து அவர் கேட்கிறார், ‘இந்த நான்கு நாள்களும் நீங்கள் இங்கேயே தங்க முடியுமா?’ என்று கேட்கிறார். எதற்காக ஐயா கேட்கிறீர்கள்? என்றார். அந்தக் காலகட்டத்தில் சென்னையில் பெரிய ஓட்டல்கள் கிடையாது. நட்சத்திர ஓட்டல்கள் கிடையாது. விருந்தினர் விடுதிகள் கிடையாது. தலைவர்களை முக்கியமான வீடுகளில்தான் தங்க வைப்பார்கள். நாட்டின் புகழ் வாய்ந்த தலைவர்கள் அவர் காந்தியாராகட்டும், நேருவாகட்டும், திலகராகட்டும் அந்தத் தலைவர்களை எல்லாம், வீடுகளில் தங்கவைப்பார்கள். அது வழக்கம். ‘நான்கு நாட்கள் நான் சொல்கின்ற ஒரு சிறுபணியை, நீங்கள் செய்ய முடியுமா?’ என்று கேட்கிறார். தேவர் திருமகன் ஆங்கிலமும் நன்கு பேச வல்லவர், ‘சொல்லுங்கள் செய்கிறேன்’ என்கிறார். ‘ஒன்றுமில்லை; வட இந்தியாவில் இருந்து பெரிய தலைவர்கள் வந்து இருக்கிறார்கள். அவர்கள் வீடுகளில் தங்க வைக்கப்படுகிறார்கள். அப்படி ஒரு தலைவருடைய வீட்டில், அவரோடு இருந்து அவரை மாநாட்டுக்கு அழைத்து வரவும், திரும்ப அழைத்துச் செல்லவும், அவருடைய செளகரியங்கள் நன்றாக நடக்கிறதா என்பதை உடனிருந்து கண்காணித்து உதவிசெய்வதற்கும் உங்களால் இயலுமா?’ என்றார். ‘தாராளமாகச் செய்கிறேன், மகிழ்ச்சியாகச் செய்கிறேன்’ என்கிறார். தேவர் வாழ்விலே அதுதான் திருப்பம். இந்த விலாசத்தில் இருக்கின்ற வீட்டுக்குச் சென்று, அந்தத் தலைவரிடத்தில் இவரை அறிமுகப்படுத்தி வைத்து, ‘உங்களுக்கு உதவியாக இருப்பார் இந்த இளைஞர்’ என்று சொன்னார். அந்தத் தலைவர்தான் நேதாஜி. இப்படித்தான் இவர்கள் இருவருக்குள் உறவு மலர்ந்தது. சந்தர்ப்பங்கள் ஒரு மனிதரின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட திருப்பங்களை ஏற்படுத்துகின்றன பாருங்கள்! நாட்டுக்கு அருட்கொடை அவர்கள் சந்திப்பு. இத்தென்னாட்டுக்கு அருட்கொடை அந்தச் சந்திப்பு. வங்கத்துச் சிங்கம் நேதாஜி அவர்களுக்கு நான்கு நாட்களும் உறுதுணையாக தேவர் இருந்த அந்தச் சந்திப்புதான், வாழ்நாள் முழுமையும் பிரிக்க முடியாத பிணைப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அப்படித்தான், அவர் பொது வாழ்வுக்கு வருகிறார். 1933 ஆம் ஆண்டு. விவேகானந்தர் முதலாவது ஆண்டுவிழா என்ற நிகழ்ச்சியில்தான் முதன்முதலாக மேடையில் முழங்குகிறார் தேவர் திருமகன். அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் பெயர் சேதுராமன் செட்டியார். "சகோதர சகோதரிகளே" என்று சிகாகோவில் நடைபெற்ற அனைத்து உலக நாடுகளின் சமய மாநாட்டில் முழங்கி, உலக நாடுகளின் பார்வையைத் தன் பக்கம் திருப்பினாரே, பரஹம்சரின் தலைமை சீடர் விவேகானந்தர், அவரைப்பற்றிப் பேச தனக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த சேதுராமன் செட்டியாரை தேவர் அய்யா மறக்காமல் இருந்து ஒரு தேர்தல் களத்தில் தன் சமூகமான தேவர் குலத்தைச் சேர்ந்தவர் போட்டியிட எல்லா வாய்ப்பும் இருந்தபோதும், அதைத்தவிர்த்துவிட்டு, சேதுராமன் செட்டியாரைத் தேர்தல் களத்தில் நிறுத்தி வெற்றி பெற வைத்த பெருமகன்தான் தேவர் திருமகன் ..

பசும்பொன் தேவர் திருமகனார், அப்போது இருந்த அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்து அரசியல் களத்தில் போராடுகிறார். அப்போது ஆங்கில ஆட்சியாளர்களால் மிகப்பெரிய அடக்கு முறைக்கு ஆளானது முக்குலத்தோர் சமுதாயம். விடுதலை வரலாற்றிலே ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்குப் பலியான சமுதாயயமும் இதுதான் . ஒவ்வொரு விதமான அடக்குமுறை இருக்கும். தென்னாப்பிரிக்காவில் நிற வேற்றுமை அடக்குமுறை, அமெரிக்க நாட்டிலே அண்மைக் காலம்வரை கருப்பர்களுக்கு எதிரான அடக்குமுறை. இந்த நாட்டிலே விதைக்கப்பட்ட வர்ணாசிரமத்தின் காரணமாக நிகழ்த்தப்படுகின்ற, நிகழ்த்தப்பட்ட அடக்குமுறை, அன்றைக்கு முக்குலேத்தோர் சமுதாயத்துக்கு விளைந்த அடக்குமுறை 1897 ஆம் ஆண்டு, 1911 ஆம் ஆண்டு 1923 ஆம் ஆண்டு இந்த மூன்றுமுறையும் குற்றப்பரம்பரைச் சட்டம் திணிக்கப்பட்டது. ரேகைச்சட்டம். அந்தச் சட்டஇத்தினால் பாதிக்கப்பட்ட வீரவாலிபர்களைப் பார்த்துச் ட்ஜ்ஹெவர் அய்யா சொன்னார்; ‘அடக்குமுறைக்கு அஞ்சாது வாருங்கள், ரேகை புரட்டுவதற்கு ஒப்புக் கொள்ள மாட்டோம், ரேகை கொடுக்காதீர்கள்’ என்றார். அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டுச் சீறி எழுந்தார்கள் தென்னாட்டில். துப்பாக்கிகளால் அவர்களை மிரட்டமுடியாது என்பதை சரித்திரம் அன்றைக்கே நிரூபித்துக் காட்டியது. குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து தேவர் திருமகனாரின் ஆணைக்கு இணங்கக் களத்தில் குதித்த வாலிபர்கள் மீது பெருங்காநல்லூரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்,சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் பதினொரு பேர். மீண்டும் துப்பாக்கிச் சூடு. மூன்றுபேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். மொத்தம் பதினான்கு பேர் தங்கள் உயிர்களைத் தந்தார்கள்.

இப்படிப்பட்ட காலகட்டத்தில் "கைரேகை வைக்காதே விரலை வெட்டி ஏறி என்று வீர முழக்கமிட்ட" தேவர் திருமகனார்க்கும், காவல்துறை உயர் அதிகாரிக்கும் சிவகாசியில் விவாதம் நடக்கிறது. ‘ரேகைச் சட்டத்தை எதிர்த்து நீங்கள் ஏன் போராடுகிறீர்கள்? உங்களுக்கு என்ன பிரச்சனை?’ என்கிறான். தேவர் அவர்கள் சொல்கிறார்கள்:‘பக்கத்து வீடு பற்றி எரிந்தால் பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா?’ உடனே அவன், ‘இதற்கு என்ன பொருள்?’ என்கிறான். பக்கத்து வீடு பற்றி எரியும்போது அணைக்காவிட்டால், அடுத்து தன்னுடைய வீடும் தானாக எரியும். இன்றைக்கு இந்த ரேகைச் சட்டம் அப்பாவிகள் மீது பாய்கிறது. நாளைக்கு என் மீதும் பாயாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்று கேட்கிறார். இந்த வாதம் நடக்கிறபோது, பெரிய காவல்துறை அதிகாரி வருகிறார். ‘எங்கள் ஏகாதிபத்தியம் உலகத்தில் பல நாடுகளில் பரவி இருக்கிறது. மிக சக்தி வாய்ந்தது. உங்களுக்குத் தெரியுமா?’ என ஆங்கிலத்தில் கேட்கிறான். அதற்க்கு தேவர் திருமகன் ஆங்கிலத்தில் பதில் சொல்கிறார். "அறிவேன் நன்றாக அறிவேன் .ஆனால் இதைவிட எத்தனையோ ஏகாதிபத்தியங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து, புல் முளைத்த சரித்திரமும் நான் அறிவேன்" என்கிறார். எங்கள் பேரரசுக்குக் கடல் போன்ற இராணுவ பலம் இருக்கிறது தெரியுமா? என்கிறான் வெள்ளைக்காரன். உடனே சொல்கிறார் தேவர் திருமகன்: ‘கடல் போன்ற படை இருக்கிறதா? மானத்தைப் பெரிதாகக் கருதுகிறவனுக்கு, சாவு பொருட்டு அல்ல. சாகத்துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டம் என்பதை நீ தெரிந்து கொள்’ என்கிறார். அவன் கேட்கிற ஒவ்வொரு வார்த்தைக்கும், அவனுடைய சொல்லைக் கொண்டே மடக்குகிறார். இப்படி அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடியவரத்தான் நம் தேவர் அய்யா

மதுரை மாநகரில் 1937 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் நாள், மதுரை இரயில்வே நிலையத்தில், காங்கிரஸ் தலைவர்கள் எல்லோரும் கூடினார்கள். என்.எம்.ஆர்.சுப்பராமன் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூடினார்கள். அண்ணல் காந்தியார் இரயிலில் வாசற்படியில் நிற்கிறார். மக்கள் திரள்கிறார்கள்.வைத்தியநாத அய்யரும் கலந்து கொண்டார். மகாத்மா காந்தி அவர்களிடம் பேசுகிறார். ‘ஆலயங்களுக்கு உள்ளே அரிஜனங்கள் {தாழ்த்தப்பட்டவர்கள் }நுழைய வேண்டும். அதுதான் என் கனவு. அதை நீங்கள் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.’ என்கிறார். ‘இப்பொழுது நான் திருவனந்தபுரத்துக்குப் போய்க் கொண்டு இருக்கிறேன். திருவனந்தபுரம் மன்னர், அங்கே இருக்கிற கோயில்களை எல்லாம் திறந்து, அரிஜனங்கள் ஆலயங்களுக்கு உள்ளே செல்ல ஏற்பாடு செய்து இருக்கிறார். இங்கே புகழ்மிக்க மீனாட்சி அம்மன் கோயில் இருக்கிறது. இந்த மதுரையிலும் ஆலயத்துக்கு உள்ளே அரிஜனங்கள் செல்ல வேண்டும். அதற்குரிய கருத்து மக்களிடத்தில் உருவாக வேண்டும். அந்தப் பணியில் நீங்கள் ஈடுபட வேண்டும்’ என்று மதுரை இரயிலடியில் இந்தக் கருத்தைத்தான் காந்தி அடிகள் பேசிவிட்டு, மீண்டும் அதே இரயிலில் புறப்பட்டு திருவனந்தபுரம் சென்றார். கிட்டத்தட்ட ஐந்தாறு மாத காலம் அதற்கான ஆயத்த வேலையில் ஈடுபட்ட வைத்தியநாத அய்யர், ஜூலை திங்கள் 8 ஆம் நாள், ‘அங்கயற்கண்ணி ஆலயத்துக்கு அரிஜனங்களை அழைத்துச் செல்வது’ என்று அறிவித்தார். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே அரிஜனங்கள் நுழைவார்களானால் வெட்டுக்குத்து இரத்தக் களரி ஆகும். கையை வெட்டுவோம், காலை வெட்டுவோம், உள்ளே நுழைய விடமாட்டோம் என்று பலபேர் பல இடங்களில் அச்சுறுத்திக் கொண்டு இருந்தார்கள். ஒரே பரபரப்பும் பதட்டமுமாக, என்ன நடக்குமோ என்ற பீதியும் இந்த மதுரை மாநகரில் ஏற்பட்டுவிட்டது. ராஜாஜியின் ஆலோசனையின்படி வைத்தியநாத அய்யர் தேவர் அய்யாவின் உதவியை நாடுகிறார் ..
கோவிலுக்கு உள்ளே அரிஜனங்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்று வைத்தியநாத அய்யர் திட்டமிடுவதைத் தடுப்பதற்கு ரவுடிகள் தயாராகி விட்டார்கள் என்ற செய்தி வந்தபோது, பசும்பொன் தேவர் திருமகனார் ஒரு அறிக்கையை துண்டு அறிக்கையாக அச்சிட்டு மதுரையில் வெளியிட்டார்
"அங்கயற்கண்ணி ஆலயம் இருக்கக்கூடிய நான்மாடக்கூடல், ஆலவாய் நகரில் நான் நின்று பேசுகிறேன். அனல்வாதம் புனல்வாதத்தைச் சந்தித்த திருஞானசம்பந்தரின் காலடிபட்ட இம்மாநகரில் இருந்து பேசுகிறேன். நரியைப் பரியாக்குவதும், பரியை நரியாக்குவதுமான சரித்திரத்துக்குச் சொந்தமான மாணிக்கவாசகர் உலவிய மதுரை மாநகரில் இருந்து நான் பேசுகிறேன். இந்த ‘மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே வைத்தியநாத அய்யர் அரிஜனங்களை அழைத்துக் கொண்டு போவதற்கு ஏற்பாடு செய்து இருக்கிறார். ஆனால் அதேநேரத்தில் சனாதனிகள் ரவுடிகள் கூட்டத்தை ஏற்பாடு செய்து, கலவரம் விளைவிப்பதற்குத் திட்டமிட்டு இருப்பதாக நான் கேள்விப்படுகிறேன். வைத்தியநாத அய்யரோடு அரிஜனங்கள் உள்ளே நுழைவார்களானால், அவர்களைப் படுபயங்கரமாகத் தாக்கி, அங்கயற்கண்ணி ஆலயத்தை இரத்தக்களரியாகச் செய்வதற்குத் திட்டமிட்டு இருப்பதாக எனக்குத் தகவல்கள் கிடைத்து இருக்கின்றன. சனாதனிகள் ஏற்பாடு செய்து இருக்கிற ரவுடிகளை எச்சரிக்கிறேன். வைத்தியநாத அய்யர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே வருகிறபோது, அடியேனும் வருவேன். அவர்கள் திட்டமிட்டபடி கலவரம் செய்ய வருவார்களானால், அந்த ரவுடித்தனத்தைச் சந்திக்க வேண்டிய விதத்தில் நான் சந்திப்பேன்."
இது தேவர் திருமகனாரின் துண்டு அறிக்கை. தேவர் அய்யாவின் உதவியால் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு 8 ஆம் தேதி வைத்தியநாத அய்யரோடு வாழ்நாள் எல்லாம் தூய்மையாகவும், நேர்மையாகவும் இருந்து நாணயமான நேர்மையான அரசியல் நடத்தி அமைச்சராக இருந்தபோதுகூட சல்லிக்காசு சேர்த்துக் கொள்ளாது இன்றைக்குச் சிலையாக நிற்கிறாரே காங்கிரசின் மதிப்பு வாய்ந்த தலைவர்களுள் ஒருவரான கக்கன்ஜி அவரும் உள்ளே நுழைந்தார்கள்.

1938 இல் திரிபுரியில் காங்கிரஸ். இரண்டாவது தடவையாக நேதாஜி காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டி இடுகிறார். நேதாஜியை நாடு விரும்புகிறது. காந்தி அடிகள் விரும்பவில்லை, படேல் விரும்பவில்லை. இன்னும் பலபேர் சேர்ந்து சூழ்ச்சி செய்தார்கள். அவர்கள் சதி செய்தார்கள். பண்டித நேரு அப்பக்கமா? இப்பக்கமா? என்று கடைசிவரை தீர்மானிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டு இருந்தார். நேதாஜியின் பக்கம்தான் அவரது உள்ளம் இருந்தது. ஆனால், காந்தியாரின் எண்ணத்துக்கு விரோதமாகச் செல்கின்ற துணிச்சல் பலருக்கு இல்லை. மகாத்மா காந்தியின் வேட்பாளராக பட்டாபி சீதாராமையா போட்டி இடுகிறார். வாக்குப்பதிவு நடக்கிறது. அப்போது காந்தி அடிகளின் தரப்பில் சொல்லப்பட்டது, தென்னாட்டில் இருப்பவர்கள், இன்றைய ஆந்திரம் உள்ளிட்ட திராவிட பூமியாக அன்றைக்குத் திகழ்ந்த சென்னை இராஜதானியில் இருப்பவர்கள், பட்டாபி சீதாராமையாவை விரும்புகிறார்கள் என்றபோது, அதேபகுதி பட்டாபி சீதாராமையாவுக்குப் பின்னால் இல்லை, அது நேதாஜிக்குப் பின்னாலேதான் இருக்கிறது என்பதை நிரூபிக்க, இங்கே இருந்து சென்ற தலைவர்கள் பசும்பொன் தேவர் திருமகனாரும், காமராசரும் ஒருசேர நேதாஜிக்கு ஓட்டுப் போட்டார்கள். ஆனால், உட்கட்சி ஜனநாயகம் அன்றைக்கே சிதைக்கப்பட்டது. நேதாஜி காய்ச்சலோடு மேடையில் வந்து இருந்தார். தானாக ராஜினாமா செய்தார். அதற்குப்பிறகுதான் ‘பார்வர்டு பிளாக்’ என்ற பெயரை, பத்திரிகைக்குச் சூட்டினார். கட்சிக்கும் சூட்டினார். ஆக, காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் சிதைக்கப்பட்டு, அவர் வெளியேற்றப்பட்டார். மேற்கு வங்கத்தில் கல்கத்தாவில் இருக்கிற வெள்ளைக்காரன் நீல் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தினார். எப்படி நீங்கள் அந்தப் பேராராட்டத்துக்கு அறிவிப்பு கொடுக்கலாம்? என்று கட்சியில் இருந்து நடவடிக்கை எடுத்தார்கள். நேதாஜி எந்தத் தவறும் செய்யவில்லை. அந்தக் காலகட்டத்தில்தான் ‘பார்வர்டு பிளாக்’ கட்சி உதயமாயிற்று. வங்கத்துச் சிங்கத்தின் வரலாறு, தியாக வரலாறு. ஈடு இணையற்ற வரலாறு. அவருக்கு நிகராக எவரும் இந்த நாட்டில் போராடவில்லை. அவருடைய படையில், 40,000 தமிழர்கள் இருந்தார்கள். வங்காளிகள் அல்ல - பஞ்சாபிகள் அல்ல - மராத்தியர்கள் அல்ல - குஜராத்திகள் அல்ல - ஒரியாக்காரர்கள் அல்ல - எவரும் இல்லை. நேதாஜியின் படையில் 40,000 தமிழர்கள் இருந்தார்கள். அதனால்தான், ‘நான் மீண்டும் பிறந்தால் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்’ என்று நேதாஜி சொன்னார். அதுக்கு காரணம் நம் தேவர் அய்யா தான் ..படை திரட்டி நேதாஜி அவர்களால் தென்னாட்டு போஸ் என்று புகழப்பட்டார் நம் தேவர் அய்யா ...அவருக்காகத் தமிழர்கள் உயிர்களைக் கொடுத்தார்கள். துப்பாக்கித் தோட்டாக்களை மார்பில் ஏந்தினார்கள். அந்தப் பட்டாளத்தின் அணிவகுப்புக்கு அடித்தளமாக இருந்தவர், பசும்பொன் தேவர் திருமகனார் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. அப்படிப்பட்ட பசும்பொன் தேவர் திருமகனார், 1939 ஆம் ஆண்டு சென்னைக்கு நேதாஜியை அழைத்துக் கொண்டு வருகிறார். பரபரப்பான சூழல். காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார். பார்வர்டு பிளாக் கட்சி தோன்றிவிட்டது. சென்னையில் செப்டம்பர் 3 ஆம் தேதி பேசுகிறார். இந்து பத்திரிகை சிறப்பு பதிப்பு போட்டு கடற்கரைக் கூட்டத்தில் விநியோகம் செய்கிறது. உலகத்தைத் திடுக்கிடச் செய்கின்ற செய்தி வந்துவிட்டது. ஆம், ஹிட்லர் தன்னுடைய போரைத் தொடங்கிவிட்டார். ஆக்கிரமிப்பைத் தொடங்கிவிட்டார். செகோஸ்லோவியாவுக்கு உள்ளே நாஜிப்படைகள் நுழைந்துவிட்டன. இந்தச் செய்தியை சிறப்புப் பதிப்பில் பிரசுரித்த பத்திரிகை வெளிவருகிறது. துண்டுச் சீட்டும் மேடையில் போகிறது நேதாஜிக்கு. அவர் இந்திய அரசியலைப் பேசிக்கொண்டு இருக்கிறார்.துண்டுச்சீட்டு வந்தவுடன், உலக அரசியல் பக்கம் திருப்பினார் நேதாஜி.. தேவர் திருமகன் சொல்கிறார், மதுரையைச் சுற்றிய சுற்றுப் பயணம் ஏற்பாடு செய்து இருக்கிறேன். நீங்கள் கட்டாயம் வர வேண்டும்‘ என்கிறார். நீண்டநேரம் ஆலோசனை செய்து, மதுரையில் மட்டும் பேசுவது என்று முடிவு எடுக்கிறார்கள். இதே மதுரை மாநகரில் 6 ஆம் தேதி நேதாஜியும், தேவர் திருமனாரும் பேசினார்கள். கடைசியாக நேதாஜி பேசியது மதுரையில்தான்! ,,இங்கே பேசிவிட்டு நேதாஜி, தேவர் திருமகனை அழைத்துக் கொண்டு நாகபுரிக்குப் போகிறார். அங்கே காங்கிரஸ் கட்சியின் கூட்டம். அந்த உறுப்பினர்களை மட்டும் அல்ல, ஜெயப்பிரகாக்ஷ் நாராயணன் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி நடத்தினார் அல்லவா, அவர் போன்ற தலைவர்களையும், பல தலைவர்களை அழைத்து ஒரு கூட்டம், மாராட்டிய மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்தக்கூட்டத்துக்கு பசும்பொன் தேவர் திருமகனாரையும் அழைத்துக் கொண்டு போகிறார் நேதாஜி. அக்கூட்டத்தில் காந்திஜி உட்கார்ந்து இருக்கிறார், பண்டித ஜவஹர்லால் நேரு இருக்கிறார். நேரு நேதாஜியின் மீது மிகுந்த அன்பாக இருந்தவர். கூட்டம் நடக்கிறது. நேரு சொல்கிறார்:‘உலகத்தில் பல நாடுகள் பிரிட்டனை ஆதரிக்கின்றன. எனவே, ஹிட்லரை எதிர்த்து நாமும் இங்கிலாந்தை ஆதரிப்போம்’ என்கிறார். உடனே நேதாஜி கேட்கிறார், ‘பல நாடுகள் என்று சொல்கிறீர்களே, எந்த நாடுகள்? ஆஸ்திரேலியாவா? கனடாவா? இல்லை காலனி நாடுகளாக இருக்கக்கூடிய இலங்கை, பர்மா போன்ற நாடுகளா? எந்த நாடுகள்?’ என்று கேட்கிறார். பதில் சொல்லவில்லை நேரு. அதற்குப்பிறகு இங்கிலாந்து நாட்டு ஆதரவு நிலை எடுக்கிறபோது, காந்தியாரைப் பார்த்து நேதாஜி சொல்கிறார், ‘கீதையைப் படிக்கிறீர்கள் அர்ஜூனனுக்குக் கண்ணன் சாரத்தியம் செய்தார், கெளரவர்களை அழிப்பதற்காக. அதைப்போல நாட்டை விடுவிக்கின்ற போரில் நீங்கள் கண்ணனாக இருந்து வழி நடத்துங்கள். இது பொருத்தமான வேளை. நம்மை அடிமைகளாக வைத்து இருக்கின்ற பிரிட்டிக்ஷ்காரனை விரட்டுவதற்குச் சரியான நேரம்’ என்று சொல்கிறார். வாக்குவாதம் வருகிறது. அதனால், கையில் வைத்து இருக்கின்ற பேனாவை எடுத்து மேஜையில் குத்துகிறார் பண்டித நேரு. அதுமட்டும் அல்ல, ‘ You you you ’ என்று நேதாஜியைப் பார்த்து நேரு சொல்கிறார். அவருக்கு முன்கோபம் அதிகம் வரும். நேதாஜி கோபப்படவில்லை. காந்தியாரைப் பார்த்துச் சொல்கிறார். காலமெல்லாம் நீங்கள் அகிம்சையைப் போதித்தீர்களே, யாரை முன்னிறுத்தி நீங்கள் அகிம்சையைப் போதித்தீர்களோ அவர் எப்படி நடந்து கொள்கிறார் என்று பாருங்கள். அழைத்ததால் வந்தேன். எப்படிப்பட்ட மரியாதை கொடுக்கப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லி வெளியேறினார். அந்தக் கூட்டத்தில் பார்வையாளராக பசும்பொன் தேவர் கலந்து கொண்டார். அதன்பிறகு நேதாஜி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் உண்ணாநோன்பு இருந்து உயிரை முடித்துக் கொள்ளத் தீர்மானித்தார். வேறு வழி இல்லாமல் விடுதலை செய்தார்கள். அவர் வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டார்கள். கொல்கத்தாவில் அவருடைய வீட்டு மாடியிலேயே தங்கி இருக்கிறார். அந்த இடத்தில் இருந்து ஒரு நள்ளிரவு நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு, ஆப்கானிஸ்தான் காபூல் வழியாக, ரக்ஷ்யா சென்று, மாஸ்கோ வழியாக பெர்லின் போய்ச் சேர்ந்தார் நேதாஜி. இது சரித்திரம். அப்படிப்பட்ட நேதாஜி அவர்களோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் பசும்பொன் தேவர் திருமகனார் அவர்கள் ஆவார்கள்.

No comments: